Friday, December 27, 2019

வான்சிறப்பு


வான்சிறப்பு

மழையினது சிறப்பைக் கூறுவது.

1.  வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
     தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று.

மழையானது நிலையாக நின்று பொழிந்துவர, அதனால் உலகின் உயிர்கள் நிலைபெற்று வருவதனாலேயே அம்மழையானது அமிழ்து என்று உணருவ தற்குரிய பான்மையைக் கொண்டிருக்கிறது.

அமிழ்+துஎன்ற இரு சொற்களால் அமைந்த வினைத்தொகை நிலைத் தொடர் அமிழ்து ஆகும்.

அமிழ் - அமிழ்கின்றது -உணவு, மேனின்றமிழ்கின்ற உணவு.

மழையே அமிழ்தாயின் ஈண்டு அமிழ்து என்னும் சொல்லால் குறிப் பிடுவதில் சிறப்பென்னவெனில், வெப்பமானது முகக்கும் நிலையில் அந்நீர் முகில் என்றும், அம்முகில், நீரைக் கொண்டு நின்ற நிலையில் அந்நீர் கொண்டல் என்றும், அக் கொண்டல் மேற்சென்ற நிலையில், அந்நீர் வான் என்றும், அவ்வான் கருமையுற்ற நிலையில் அந்நீர் கார் என்றும், அக்கார் மழைக்கும் நிலையில் அந்நீர் மழை என்றும், அம்மழைதான் வாழ்வார்ககு அமிழும் உணவாகி அமிழ்ந்து வரும் நிலையில் அமிழ்து என்றும், அவ்வமிழ்து நிலத்தை மருவும் நிலையில் மாரி என்றும் மற்றும் பற்பல நிலைகளில் அந்நீர் பற்பல பெயர் பெறினும் அவற்றில் அமிழ்து என்று கூறப்படும் நிலையே சிறப்பாதல் அறிக.

மழை பெய்கின்றது, உயிர்கள் வாழ்கின்றன என்பதை - கேள்விக்கு இடமில்லாமல் அறிவுக்கும் பொருத்தமாகத் திருவள்ளுவர் சொல்லத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்.

மக்கள் உயிர் வாழ்க்கைக்கு மழை மிக்கப் பயன்பட்டு வருகின்றது என்பதுதான் வள்ளுவர் கருத்து.

2.  துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
     துப்புஆய தூஉம் மழை.

உண்பார்க்கெல்லாம் உயிர்த்துணையாகிய சோறு, கறி முதலிய உணவு களை உண்டாக்கி, அவ்வுண்ணுதலையுடைய உலகுக்கு, தானே உண்ணு நீர் ஆகியும் உதவுவது மழையாம்.

சோறு முதலியவைகளை ஆக்கினால் மட்டும் அமையாது. உண்ணு நீரும் இன்றியமையாதது என்பார் துப்பாய தூஉம் மழை என்றார்.

3.  விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
     உண்இன்று உடற்றும் பசி.

மழையானது மிகுதியாக இருக்கவும், அது பெய்யாதாயின், விரிந்த நீரையும் இந்த அகன்ற உலகத்தின்கண் உணவு இல்லாதொழியும். அதனால் பசி நோய் துன்புறுத்தும்.

விண் - மழை. உண் இன்று - உணவு இல்லாதொழியும்.

பசி என்பது வயிற்றின் நிலை வேறுபாடு. அப்படியிருக்க மழையில்லாது ஒழியுமானால், உணவு இல்லாதொழியும். பசித்துன்பம் உண்டாகும்.

4.  ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
     வாரி வளங்குன்றிக் கால்.

உழுவோர் மழை என்னும் அரியவரவு பயன்குன்றிய இடத்து ஏர் கொண்டு உழுதலைச் செய்யமாட்டார்.

மழையின்றேல் உழவு நடவாது.

வாரி-தூய தமிழ்ச்சொல். புயல் - புய்த்தல். பிறவினை புய்தல் - தன்வினை.

விரைந்து அடிக்கும் மழையாயினும் அது வேண்டா இடத்துச் சிதறாமல் வேண்டும் வழி வருதலைக் குறிக்க வேண்டும். ஆதலின் புயலென்னும் வாரி என்றார்.

5.  கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வுஆய்மற்றுஆங்கே
     எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாது, உலகின் வாழ்வாரைக் கெடச் செய்வதும், அஃதின்றி அவ்விடத்து அவ்வாறு கெட்டார்க்குத் துணையாகி பெய்து, கைதூக்கி விடுவதும் ஆகிய அனைத்தும் மழை.

இயற்கையின் கொடையாகிய மழை மக்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்றோ, நன்மை செய்ய வேண்டும் என்றோ எண்ணிப் பெய்வதும் பெய்யாதொழிவதும் செய்யாது. எனினும் மழையால் மக்கள் அடையும் நலம், தீது கருதி அதைக் கெடுப்பது, எடுப்பது என்கிறார் என்பது இங்கு அறிதல் வேண்டும்.

பேசாத ஒன்றைப் பேசுவது போலவும் வராத ஒன்றை வருவது போலவும் வைத்துச் செய்யுள் செய்வது என்பது கவி மரபு.

6.  விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
     பசும்புல் தலைகாண்பது அரிது.

பசும்புல்லின் தலையையும் மழையின் துளி மண்ணில் வீழ்ந்தாலல்லது வேறு வகையால் அவ்விடத்து காணமுடியாது.

மழையின்றேல் ஓரறிவுயிராகிய புசும்புல்லும் உண்டாதல் இல்லை.

7.  நெடுக்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
     தான்நல்காது ஆகி விடின்.

முகிலானது, மின்னி மழை தராதாகிவிட்டால், நீரான் மிக்கக் கடலும் தனது நீரின் மிகுதித் தன்மை குறையும் மழையின்றேல். பெருங்கடலும் தன் மிகுதித் தன்மை குறையும்.

8.  சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
     வறக்குமேல் வான்ஓர்க்கும் ஈண்டு.

மேல்நோக்கி (மழை வரவை) ஆராயும் இவ்வுலக மக்கட்கு, மழை பெய்யா விடில், விழாவுடன் கூடிய பூசனை நடவாது. மழையின்றேல், விழா முதலியவை நடைபெற மாட்டா.

சிறப்போடு பூசனை: ) மன்னன் புதல்வன் வாட்போரிட்டு, மேம்பட்டான். அம்மேம்பாடு கண்டு மக்கள் அன்புற்றார். அதனால் அவனை நாடாளச் செய்தார். அப்போது நடக்கின்றதோர் விழா.

) தமிழ் மறவன் தனி நின்று போராடிப் பருவுடல் நீத்துப் புகழுடன் நிறுவினான். அவனுக்கு நடுகற் சிறப்பும் பூசனையும் செய்ய நாள் குறித்தார்

அஃதோர் சிறப்போடு பூசனை.

9.  தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்
     வானம் வழங்காது எனின்.

அகன்ற உலகின்கண், மழை பெய்யாவிட்டால், தானமும் தவமும் ஆகிய இரண்டு அறங்களும் நிலைபெற மாட்டா. தானம்-இல்லார்க்கு உள்ளார் மனமுவந்து அளிப்பதோர் பண்பு. தவம் - பிறர் பால் எழும் அருள் மிகுதியைக் குறித்தது.

10. நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
      வான்இன்று அமையாது ஒழுக்கு.

உலகம் நீர் இன்றி நிலைபெற முடியாது என்றால், ஒழுக்கம் எப்படிப் பட்டவர்க்கும் மழையில்லாமல் நிலைபெறாது. மழையின்றேல் ஒழுக்கம் நிலையாது.

No comments:

Post a Comment